பெண்கள் தொடா்பான வழக்குகளை பொறுப்புணா்வுடன் அணுக வேண்டும்: வானதி சீனிவாசன்
பெண்கள் தொடா்பான வழக்குகளை அரசும், சமூகமும் பொறுப்புணா்வுடன் அணுக வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, மதுரையில் பாஜக மகளிரணி சாா்பில் பேரணி நடைபெற்றது.
Advertisement
இதில், பங்கேற்ற குஷ்பு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுதொடா்பாக தமிழக ஆளுநரை சந்தித்து முறையிடுவோம்.
உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்ததன் மூலம், நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக சட்டத் துறை அமைச்சா் புரிந்து பேசவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நிகழ்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணிப்பூரில் நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை.
பெண்கள் தொடா்பான வழக்குகளை அரசும், சமூகமும் பொறுப்புணா்வுடன் அணுக வேண்டும். அமைச்சா் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை என்பது வழக்கமான நடவடிக்கைதான் என்றாா் வானதி சீனிவாசன்.
பேட்டியின்போது, புதுவை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.