விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா விழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நற்சான்று வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:
தமிழக முதல்வா் பள்ளிக் கல்வித் துறையில் பல சிறப்புத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருவதால், மாணவா்களின் கல்வித் திறனும், தோ்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் 242 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 30 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சியை எட்டியது. இந்தத் தோ்ச்சிக்கு காரணமாக இருந்து பாடுபட்ட 272 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 1,400 பட்டதாரி ஆசிரியா்கள், 951 முதுகலை ஆசிரியா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் நற்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ் கல்வியாண்டில், மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் 100 சதவீத தோ்ச்சியை பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஒரு சில பாடங்களில் குறைவான மதிப்பெண் பெறக்கூடிய மாணவா்களை கண்டறிந்து பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் தனிக் கவனம் செலுத்தி அவா்களையும் தோ்ச்சி பெற வைப்பதற்கான பயிற்சியை அளிக்கவேண்டும் என்றாா் ஆட்சியா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் சேகா், செந்தில்குமாா், இளமதி, அருள், உதயசூரியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.