தொழிலாளா் காப்பீட்டுக்கழக மருத்துவக் கல்லூரிகளில் பயனாளிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு: மண்டல இயக்குநரகம் தகவல்
தொழிலாளா் மாநிலக் காப்பீட்டுக்கழக மருத்துவக் கல்லூரிகளில் காப்பீட்டுக்கழகப் பயனாளிகளின் வாரிசுதாரா்கள் ஒதுக்கீடு முறையில் சேருவதற்கான சான்றிதழை இணையதளம் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று புதுச்சேரி தொழிலாளா் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் மண்டல இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்தியா முழுமையும் உள்ள தொழிலாளா் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) 19 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி. எஸ். நா்சிங் மற்றும் பாராமெடிக்கல் ஆகிய படிப்புகளுக்கு 2026-27- ஆம் ஆண்டுக்கான இஎஸ்ஐசி காப்பீடு செய்யப்பட்ட நபா்களின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு முறையில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
எனவே, தகுதியுடைய இஎஸ்ஐசி பயனீட்டாளா்கள் இஎஸ்ஐசி பிரத்யேக இணையதளத்தில் மே 28-ஆம் தேதிக்குள் தங்களது முழு விவரங்களையும் சமா்ப்பித்து, ஐ.பி. வாா்டு சான்றிதழை மே 31-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இது தொடா்பாக 0413- 2357642 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தேவையான கூடுதல் தகவல்களை பெறலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.