பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி அதிமுக பிரமுகர்கள் சிறை பிடிப்பு: சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் தேர்தல் குறித்து பேசுவதற்காக வந்த அதிமுக பிரமுகர்களை புதிய தமிழகம் கட்சியினர் சிறை பிடித்தனர்.
தமிழகத் தேர்தல் களம் 2016பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி அதிமுக பிரமுகர்கள் சிறை பிடிப்பு: சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் தேர்தல் குறித்து பேசுவதற்காக வந்த அதிமுக பிரமுகர்களை புதிய தமிழகம் கட்சியினர் சிறை பிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் தேர்தல் குறித்து பேசுவதற்காக வந்த அதிமுக பிரமுகர்களை புதிய தமிழகம் கட்சியினர் சிறை பிடித்தனர். பின்னர் வருமான வரித் துறையினர் மற்றும் பறக்கும் படையினர் வீடு மற்றும் அவர்களின் வாகனங்களை சோதனையிட்டு அவற்றில் ஒன்றும் இல்லாததால் திரும்பிச் சென்றனர். இதனால் இப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் பதற்றம் நீடித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவில் குறிப்பிட்ட ஒருவரின் வீட்டிற்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி மற்றும் அதிமுக வேட்பாளர் சந்திரபிரபாவின் கணவர் முத்தையா ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை வந்திருந்தனர். அங்கு சில மகளிர் சுய உதவிக் குழுவினருடன் அவர்கள் தேர்தல் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் வீட்டின் வெளியே நின்றது.
இது குறித்து தகவல் கிடைத்து வந்த புதிய தமிழகம் கட்சியினர் வீட்டின் கிரில் கேட்டிற்கு பூட்டு போட்டுவிட்டு, காரில் பணம் இருப்பதாயும், வீட்டினுள் இருந்து ஏராளமானோருக்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்யப்படுவதாயும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஏராளாமான புதிய தமிழகம் மற்றும் திமுக கட்சியினர் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் தா.இன்பத்தமிழன் மற்றும் அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனிடையே புதிய தமிழகம் கட்சியினருக்கும், அதிமுகவினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், தேர்தல் பார்வையாளர் அமீன்கான், வருமான வரித்துறை அதிகாரிகள் பாலு, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் வீட்டினுள் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, பின்னர் காரின் சாவியை வாங்கி வந்து அதனையும் அனைவர் முன்னிலையிலும் திறந்து முழுவதும் சோதனையிட்டனர். சோதனையில் எந்த பணமும் இல்லை என தெரியவந்தது.
தொடர்ந்து இரு தரப்பினரும் கும்பலாக கூச்சலிட்டுக் கொண்டிருந்ததையடுத்து லேசாக தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர்.
சுமார் 3 மணி நேரம் இப் பகுதியில் கட்சியினர் திரண்டதால் கடும் பதற்றம் நிலவியது.