பொதுத் துறையைச் சேர்ந்த ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.1,085 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபிக்கு தெரிவித்துள்ளதாவது: ஆயில் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஒப்புதலை வழங்கியுள்ளது. அதன்படி, 10 சதவீதத்துக்கும் மிகாத அளவில் பங்குகள் இந்த திட்டத்தின் மூலம் திரும்பப் பெறப்படவுள்ளன. முற்றிலும் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் அடிப்படையில் 5.05 கோடி பங்குகள் திரும்பப் பெறப்படவுள்ளன. பங்கு ஒன்றின் விலை ரூ.215 என்ற அடிப்படையில் வாங்க இந்த திட்டத்துக்காக ரூ.1,085.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆயில் இந்தியா செபி-யிடம் கூறியுள்ளது.
அதிக ரொக்க கையிருப்பை கொண்டுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அரசின் வருவாய் இலக்கை அடைய அதிக டிவிடெண்டுகள் வழங்க வேண்டும் அல்லது பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா ஏறக்குறைய ரூ.20,000 கோடி வரை ரொக்க கையிருப்பை வைத்துள்ளது. இதனையடுத்து, பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை அந்நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமாக 66.13 சதவீத பங்குகள் உள்ளது. இதில், 5.05 கோடி பங்குகள் இந்த திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1,085 கோடி வருவாய் கிடைக்கும்.