இந்திய சினிமாவின் அடையாளம்: விசாரணை படம் பற்றி இயக்குநர் விஜய்!
என்ன ஒரு படம்! வெற்றிமாறன் ஒரு மகத்தான படத்தை அளித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் ஒரு மகத்தான படத்தை அளித்துள்ளார் என்று விசாரணை படத்துக்கு இயக்குநர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆனந்தி, சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல் ஆகியோர் நடித்துள்ளளார்கள். இந்தப் படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது. வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் விஜய் கூறும்போது, ‘என்ன ஒரு படம்! வெற்றிமாறன் ஒரு மகத்தான படத்தை அளித்துள்ளார். அவர் மிக அருமையாக இந்தக் கதையை இயக்கியுள்ளார். படத்தில் நடித்தவர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார்கள். தினேஷ் மற்றும் மற்ற நடிகர்களுக்கு என் பாராட்டு. இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலக அரங்கில் இந்திய சினிமாவின் அடையாளமாக விசாரணை இருக்கும். வெளிவருவதற்கு முன்பு படம் பார்த்தது என் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.
விசாரணை, டிசம்பரில் வெளிவரவுள்ளது.