ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை திரிஷா மலர் அஞ்சலி!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பிரபல நடிகை த்ரிஷா இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பிரபல நடிகை த்ரிஷா இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் கடந்த 5-ஆம் தேதி மரணம் அடைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை 4 மணி முதலே அஞ்சலி செலுத்துவதற்கு என ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.
இந்நிலையில் காலை 9.30 மணி அளவில் பிரபல நடிகை திரிஷா தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். திரிஷா மட்டும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஜெயலலிதா சமாதி அருகே சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்து வணங்கிய த்ரிஷா மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சமாதி அருகே தரையில் விழுந்து வணங்கினார். அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை திரிஷாவும், அவரது தாயாரும் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.