முகப்பு
செய்திகள்

யார் மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள்!

விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் அந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Updated On : 11 ஏப்ரல், 2017 at 10:27 AM
பகிர்:

விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் அந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

புதுமுகம் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள நெருப்புடா படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ்,ராகவா லாரன்ஸ், தனுஷ், பிரபு, விஷால், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியது:

Advertisement

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு போட்டி என யாரும் இல்லை. சிவாஜி கணேசனை மனதில் கொண்டுதான் அண்ணாமலை படத்தில் நடித்தேன். அதைப் பார்த்த சிவாஜி கணேசன் என் நடிப்பை பாராட்டினார். தனது அப்பா, தாத்தா பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் விக்ரம் பிரபுவிடமும் உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஊடகங்கள் சினிமா குறித்து விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் அந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாத அளவுக்கு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல தயாரிப்பாளர்களும் ஒரு படம் தயாரிக்கும்போது, படத்தில் வேலை பார்த்த அனைவரும் இந்த படத்தினால் நன்மை பெற வேண்டும் என நினைக்க வேண்டும். தான் மட்டுமே லாபம் பார்க்க வேண்டும் என நினைக்கக் கூடாது என்றார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது: வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியாகிறது என்றால், அப்படத்துக்கு சில நாள்கள் கொடுங்கள். விமர்சனத்தில் இது மக்களின் கருத்து என்று போடாதீர்கள். தினசரிகளில் விமர்சனத்துக்கு கீழே ஸ்டார்கள் எல்லாம் போடுவார்கள். அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

சில பத்திரிகையாளர்கள் சமூக வலைதளத்தில் படங்களை கிழித்தெறிகிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதை 3 நாள்கள் கழித்து செய்யுங்கள். முதல் நாளே ஒரு படத்தின் விமர்சனத்தை எழுதினால், அதை தமிழ்நாட்டு மக்களே ஆதரிப்பது போன்று உள்ளது. இந்த கோரிக்கையை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், நடிகர், மனிதர் என்ற அடிப்படையில் உங்கள் முன் வைக்கிறேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.