தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் படம் ’ ‘பேட் மேன்’ (Pad Man). கிராமப் புற ஏழை மகளிருக்கு சானிட்டரி நாப்கின்களை மலிவு விலையில் தயாரித்து தரும் இயந்திரத்தை உருவாக்கிய தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை சித்திரத்தை மையமாக வைத்து ட்விங்கிள் கன்னா எழுதிய திரைக்கதையே ‘பேட் மேன்’ ஆகவிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இதே சானிட்டரி நாப்கின்களை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்டுள்ள மற்றொரு திரைப்படமான ‘Phullu' ஜூன் 16 அன்று திரைக்கு வருகிறதாம்.
ஒரே விசயத்தை மையமாகக் கொண்ட இரு திரைப்படங்களா? இரண்டுமே ஒரே கதையா? என்ற சந்தேகத்தில் ‘Phullu' இயக்குனர் அபிஷேக் சக்ஸேனாவை அணுகியதில்; இரண்டும் ஒன்றல்ல; வெவ்வேறு கதை கொண்ட படங்கள். அக்ஷயின் ‘பேட் மேன்’ தமிழர் முருகானந்தத்தின் வாழ்க்கை சித்திரத்தை மையமாக எடுக்கப் பட்டு வரும் பயோ பிக் வகை திரைப்படம். அந்தப் படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முருகானந்தந்தின் வாழ்வில் நடைபெற்ற நிஜ சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படமாக்கப் படுபவை. ஆனால் எனது திரைப்படம் ‘Phullu' யாருடைய வாழ்க்கைச் சித்திரமும் அல்ல. இது ஒரு விழிப்புணர்வு திரைப்படம். பெண்களிடையே சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சில மருத்துவர்களின் உதவியோடும், அவர்களது ஆலோசனைகளோடும் இந்தப் படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. இது மாத விடாய் காலங்களில் பெண்களுக்கு நேரும் நிஜ பிரச்சினைகளை மையமாக வைத்து அவற்றுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு கற்பனை படம். எனவே எனது திரைப்படம் 'Phullu' வுக்கும், அக்ஷயின் ‘பேட்மேன்’ க்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இரண்டிலும் பேசப்படும் விசயங்கள் வெவ்வேறானவை என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.