காலா படத்துக்கு எதிராக வழக்கு: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
"காலா' திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை 6 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"காலா' திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை 6 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.எஸ்.ஆர். விண்மீன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கே.ராஜசேகரன் என்பவர் 6 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நடிகர் ரஜினிகாந்த் இப்போது படப்பிடிப்பு நடத்தி வரும் "காலா’ (எ) கரிகாலன் படத்தின் தலைப்பு, மூலக்கரு அனைத்தும் என்னுடைய உருவாக்கம் ஆகும். இந்தத் தலைப்பை ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருக்கிறேன்.
Advertisement
ஆனால், செல்வாக்கு மிகுந்த ஒருசிலருக்கு ஆதரவாக, என்னுடைய தலைப்புப் பதிவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை புதுப்பிக்காமல் கைவிட்டுள்ளது. பதிவு விதிகள் தவறாக பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், எனது தலைப்பும், மூலக் கருவும் மறுபதிப்பு செய்து படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே "காலா’ படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளன. எனவே, "காலா’ படத்தின் படப்பிடிப்பு மேற்கொண்டு தொடர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வருகிற 15 ஆம் தேதி பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.