பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம்: வருத்தம் தெரிவித்தார் ஷங்கர்
பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2.0 படப்பிடிப்பில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.
Advertisement
2.0 படத்தின் முக்கியமான காட்சியைப் படமாக்கியுள்ளோம். இன்னும் ஒரு பாடல் மற்றும் சில சின்ன வேலைகள் மட்டும் உள்ளன என்று ஷங்கர் சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் 2.0 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் திருவல்லிக்கேணிப் பகுதியில் நடைபெற்றது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த படப்பிடிப்பு வாகனங்களை செய்தியாளர் ஒருவர் படம்பிடித்தார். இதனால் அவருடன் படப்பிடிப்புக் குழுவினர் தகராறு செய்ததாகவும் பிறகு அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் இரவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கிவிட்டு பகலில் படப்பிடிப்பு நடத்தியதாகவும் 2.0 குழு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து சென்னை ஐஸ் அவுஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தாக்குதல் நடந்தது எனக்குத் தெரியாது. என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன். யாருக்கும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று பேட்டியளித்தார்.