ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்
அமெரிக்காவின் வரிக்கு இந்தியா ஒப்புக்கொண்டதாக பாஜக தலைவர் ராம் மாதவ் கூறியதைச் சுட்டிக்காட்டி, சரணடைந்த சங்கமாக ஆர்எஸ்எஸ் மாறியதாக ராகுல் காந்தி விமர்சனம்
அமெரிக்காவின் வரிக்கு இந்தியா ஒப்புக்கொண்டதாக பாஜக தலைவர் ராம் மாதவ் கூறியதைச் சுட்டிக்காட்டி, சரணடைந்த சங்கமாக ஆர்எஸ்எஸ் மாறியதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற புதிய இந்தியா மாநாட்டில் பங்கேற்ற இந்தியா ஃபவுண்டேஷன் தலைவரும் பாஜக தலைவருமான ராம் மாதவிடம், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா எங்கே பின்தங்கியுள்ளது? உறவை மேம்படுத்த போதுமான அளவு செயல்படவில்லையா? என்ற கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார்.
ராம் மாதவ் பேசுகையில், ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம். ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதையும் நிறுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
Advertisement
எங்கள் எதிர்க்கட்சிகளிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும், 50 சதவிகித வரிக்கு ஒப்புக்கொண்டோம்.
வரி குறித்து நாங்கள் எதுவுமே சொல்லவில்லை. நாங்கள் பொறுமையுடன்தான் இருந்தோம்.
புதிய வர்த்தக ஒப்பந்தத்தில்கூட, முன்பிருந்ததைவிட அதிகமாக 18 சதவிகித வரிக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதில் இந்தியா எங்கே பின்தங்கியுள்ளது? இதில் இந்தியா எங்கே போதுமான அளவு செயல்படவில்லை? என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராம் மாதவ்வின் இந்தப் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
தனது பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, ராம் மாதவ் தனது சமூக ஊடகப் பக்கத்தில், நான சொன்னது தவறுதான். ரஷியாவிலிருந்து எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துவதற்கு இந்தியா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், 50 சதவிகித வரியையும் இந்தியா கடுமையாக எதிர்த்தது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தோருக்கு ஒரு சுருக்கமான மாற்றுக் கருத்தை முன்வைக்கவே முயன்றேன். அது உண்மையில் தவறானது. என் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டார்.
இந்த நிலையில், மாதவ்வின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ராஷ்டிரிய சரண்டர் சங்கம் - நாக்பூரில் போலி தேசியம், அமெரிக்காவில் வெளிப்படையான அடிமைத்தனம்.
ராம் மாதவ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய சுவயம்சேவாக் சங்கம் என்ற பெயரை ராஷ்டிரிய சரண்டர் சங்கம் என்று ராகுல் விமர்சித்திருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.