நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம் அறம். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரத்தை மெருகேற்ற நயன்தாரா நிறைய ஹோம் வொர்க் செய்வார். சந்திரமுகியில் துர்கா, யாரடி நீ மோகினியில் கீர்த்தி, மாயா என்று அவர் ஏற்று நடித்த சில பாத்திரங்கள் மறக்க முடியாதவை.
நடிக்க வந்த 15 ஆண்டுகளில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளார். ஒரு படத்தின் கதையைக் கேட்பதில் ஆரம்பித்து அப்படம் படம் வெளியாகும் வரை பொறுப்புணர்வுடன் இருப்பவர் நயன்தாரா. எனவே ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’என்று புகழப்படுகிறார்.
அழகும் திறமையும் ஒருங்கே பெற்ற நயன்தாராவின் வெற்றியின் ரகசியம் கடின உழைப்பு மற்றும் நேரம் தவறாமை. படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவதுடன் தனது காட்சிகளை அதிக டேக்குகள் வாங்காமல் கவனமாக செய்து முடித்து நேரத்தை மிச்சப்படுத்துவார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாதபோதும் ஒத்திகை பார்த்துக் கொண்டும், அடுத்து வரவிருக்கும் தன்னுடைய காட்சிகளை எப்படி மெருக்கேற்றி நடிக்கலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பார்.
எந்த ஜானரிலும் தன்னை பொருத்திக் கொள்ளும் ஆற்றல் அவருக்குண்டு. ரொமான்ஸ், திரில்லர் மட்டுமல்லாமல் ஹாரர் படங்களிலும் நடிப்பாற்றலை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார் நயன்தாரா.
சமீபத்தில் அறம் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமான மதிவதினிக்கு முற்றிலும் உயிர் கொடுத்திருப்பவர் நயன் தான் என்றால் அது மிகையில்லை.
தற்போது நயன்தாரா, வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் சமூக பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் படம். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இந்தப் படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ல் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
நயன்தாராவின் அடுத்த திரைப்படமான வேலைக்காரன் ரிலீசுக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.