முகப்பு
செய்திகள்

திரையுலகம் மோசமல்ல, நபர்கள் சிலர்தான்: நடிகை பாவனா கருத்து

திரையுலகைப் பொறுத்தவரை எந்தத் தவறும் இல்லை. சில நபர்களின் எண்ணங்கள்தான் அழுக்காக உள்ளன...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்த மாட்டேன் என நடிகை பாவனா கூறியுள்ளார்.

31 வயது நடிகை பாவனா துபையில் உள்ள ஆடை வடிவமைப்பாளர் ரெஹனா பஷீரின் கடையைத் திறந்து வைத்தார்.

பிறகு, செய்தியாளர்களிடம் பாவனா பேசியதாவது: 

என் உலகத்தில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆடம் ஜான் படத்துக்குப் பிறகு நான் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. சிறிது காலம் பொறுமையாக இருந்து பிறகுதான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வேன். 

கேரளத் திரையுலகைப் பொறுத்தவரை எந்தத் தவறும் இல்லை. சில நபர்களின் எண்ணங்கள்தான் அழுக்காக உள்ளன. நட்சத்திரங்களின் பிள்ளைகள் பலர் இந்தத் துறைக்கு வந்துள்ளார். ஒருவேளை இந்தத் துறை மோசமாக இருந்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தத் துறைக்கு அனுப்புவார்களா? மிகுந்த ஆர்வத்துடன் பணிபுரியும்வரை இந்தத் துறை சரியாகவே இருக்கும். 

திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதை விடவும் திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கையில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். புதிய வாழ்க்கை மீது மிகுந்த ஆவலாக உள்ளேன். திருமணத்துக்கான ஷாப்பிங்கை இன்னும் தொடங்கவில்லை. இன்னும் 3 மாதங்களே இருந்தாலும் அந்தச் சமயத்தில் எல்லாம் சரியாக நடந்துவிடும் என எண்ணுகிறேன். என்னுடைய நிச்சயதார்த்தம் கூட  இரண்டு மூன்று நாள்களில் முடிவு செய்யப்பட்டு எல்லாம் சரியாக நடந்தன. 

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தமாட்டேன். இதுதான் என் தொழில். என் வாழ்க்கையில் திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு பங்கிருக்கும் என்று கூறியுள்ளார். 

கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்துவருகிறார் பாவனா. நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டியிருந்ததால் கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.