சென்னை: யாருடைய படம் முக்கியமான படம் என்று தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இருவர் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரபல இசையமையாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. இவர் பெரும்பாலான புதியவர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளியான 'சென்னை- 600028' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் அஜித் நடிப்பில் 'மங்காத்தா' என்ற மாபெரும் வெற்றிப் படம் உட்பட ஏழு படங்களை இயக்கியுள்ளார். தற்பொழுது சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ஷிவா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் 'பார்ட்டி' என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
அதேபோல விளம்பர பட இயக்குனராக இருந்து 2010-இல் வெளியான 'தமிழ்ப்படம்' என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். பின்னர் இவர் இயக்கிய 'ரெண்டாவது படம்' என்னும் திரைப்படம் தற்பொழுது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் 'தமிழ்ப்படம் 2.0' என்னும் படத்தினை தற்பொழுது இயக்கி வருகிறார். இதில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான ஷிவாவும் நடிக்கிறார்.
தற்பொழுது நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் ஏதோ ஒரு காரணத்தால் ஷிவா பங்கேற்க இயலவில்லையென்று தெரிகிறது. ஆனால் அவர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திற்கான தேதிகளில் ஆர்வமாக இருப்பதும் தெரிய வருகிறது. இது குறித்து நடன இயக்குநர் கல்யாண் உடனான டிவிட்டர் உரையாடலில் அமுதன், 'என்னுடைய படம் ஒன்றும் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' போல சில்லியான படம் இல்லை. நான் சீரியஸான படம் இயக்குபவன் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு உடனே கடுமையாக பதில் அளித்திருந்த வெங்கட் பிரபு,'முதலில் ரெண்டாவது படம் திரைப்படத்தை வெளியிடும் வேலையை பாருங்க; பிறகு சீரியஸான படம் எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் அமுதன் படத்தின் பெயர் ஷங்கரின் ‘2.0’ படப்பெயரை ஒத்திருப்பதால், 'சொந்தமாக பெயரை வையுங்க' என்று கிண்டல் செய்திருந்தார். பின்னர் அமுதன் ரெண்டாவது படத்தில் வெங்கட் பிரபுவின் தம்பி நடிக்க வேண்டும் என்று அமுதன் வந்து கெஞ்சினார் என்றெல்லாம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
இவர்களது சண்டையினை டிவிட்டரில் பலரும் விமர்சித்திருந்தார்கள்.