நடிகை அமலா பால் வரி ஏய்ப்பு செய்த விவகாரம்: நடவடிக்கை எடுக்க கிரண் பேடி உத்தரவு
நடிகை அமலா பால் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்...
நடிகை அமலா பால் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.
பிரபல நடிகை அமலா பால் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ் கிளாஸ் வகை பென்ஸ் காரை வாங்கினார். ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட பென்ஸ் காரை கேரளாவில் பதிவு செய்யாமல் புதுச்சேரி முகவரி கொடுத்துப் பதிவு செய்துள்ளார். ஆனால் அமலா பால் அளித்துள்ள புதுச்சேரி முகவரியில் பொறியியல் கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். எனவே அமலா பால் அளித்துள்ளது போலியான முகவரி எனத் தெரிய வந்துள்ளது. அந்த முகவரியில் தங்கியுள்ள மாணவர், தனக்கும் அமலா பாலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
புதுச்சேரியைச் சொந்த மாநிலமாகக் கொண்ட ஒருவர் மட்டுமே புதுச்சேரியில் பதிவு செய்யமுடியும். இதனால் போலி முகவரி அளித்து கேரளாவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. கேரளாவில் உள்ள அமலா பால், புதுச்சேரி முகவரியை அளித்து ரூ. 20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது விழுந்துள்ளது.
புதுச்சேரியில் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பு கொண்ட கார்களுக்கு ரூ. 55 ஆயிரம் சாலை வரி செலுத்தினால் போதுமானது. ஆனால் கேரளாவில் காரின் மதிப்பில் 20 சதவிகிதத்தை சாலை வரியாக அளிக்கவேண்டும். அமலா பால் வாங்கிய பென்ஸ் காருக்கு கேரளாவில் ரூ. 20 லட்சம் வரை வரி செலுத்தவேண்டியிருக்கும். ஆனால் புதுச்சேரி முகவரி அளித்து ரூ. 55 ஆயிரம் மட்டும் வரியாகச் செலுத்தி காரைப் பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து எர்ணாகுளம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் போலி முகவரியில் நடிகை அமலா பால் கார் வாங்கியது குறித்து 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துச் செயலாளருக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.