அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியாவிலிருந்து 'நியூட்டன்' என்ற ஹிந்தி திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியூட்டன், இந்திய அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் சிறந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் அனுப்பி வைக்கப்படும். அந்தத் திரைப்படங்களை ஆஸ்கர் குழுவினர் ஆராய்ந்து, அவற்றை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும்.
இந்நிலையில், ஹிந்தி இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு (ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) அனுப்பி வைத்துள்ளது.
ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்காக இந்தியத் திரைப்படக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட 26 திரைப்படங்களுள் நியூட்டன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலர் சுப்ரான் சென் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வருடம் முதல் ஆஸ்கருக்குத் தேர்வாகும் படத்துக்கு ரூ. 1 கோடி உதவித்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வருடம் தேர்வான நியூட்டன் படம் ரூ. 1 கோடி பெறவுள்ளது. அர்த்தமுள்ள, நல்ல படங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாக தேர்வுக்குழுத் தலைவர் சி.வி. ரெட்டி அறிவித்துள்ளார்.