‘சுப்ரமண்யபுரம்’ தமிழில் ஸ்வாதிக்கு அறிமுகத் திரைப்படம். படத்தில் புதுமுக நடிகை போலெல்லாம் நடிக்காமல் இயல்பாக நடித்திருந்தார். தமிழுக்கு வரும் முன் தெலுங்கில் சில படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும் கதாநாயகியாக தமிழில் சுப்ரமண்யபுரம் அவருக்கு பெற்றுத்தந்த நற்பெயரை வேறொரு படம் அளித்திருக்க வாய்ப்பில்லை.
‘கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் எனைக் கட்டி இழுத்தாய்’ - பாடல் மூலமாக தனது வட்டக் கண்களை சாஸராக விரித்து பல கோடி தமிழ் இதயங்களைக் கொள்ளையடித்தார்.
ஆயினும் அந்த ஒரு படத்தால் மட்டுமே இன்று வரையிலும் நினைவில் நிற்க முடிந்ததே தவிர தமிழில் அவர் நடித்த போராளி, வடகறி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா... போன்ற திரைப்படங்கள் எல்லாம் வொர்க் ஆன மாதிரி தெரியவில்லை.
பிறகு மீண்டும் தெலுங்குக்குச் சென்றவர் அங்கேயும் சரியான வாய்ப்புகள் இல்லாததால் என்னவானார் என்பதே தெரியாமலிருந்தது. இப்போது பார்த்தால் திடீரெனக் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி.
ஸ்வாதியின் வருங்காலக் கணவர் விகாஸ் ஒரு சர்வ தேச பைலட். தற்போது ஜகார்த்தாவில் வசித்து வரும் விகாஸுக்காக, ஸ்வாதி திருமணம் முடிந்ததும் ஜகார்த்தாவுக்குப் பறந்து விடுவாரோ என்னவோ? இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும் வரும் ஆகஸ்டு 30 ஆம் தேதி மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் முன்னிலையில்
திருமணத்தை சுருக்கமாக முடித்து விட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி கொச்சினில் பெரிதாக ரிசப்சன் வைப்பதாக திட்டமாம். மணமகன் விகாஸ் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவாசி என்பதால் ஸ்வாதியும் திருமணத்திற்குப் பிறகு இந்தியாவை விட்டு நீங்கி ஒரு இந்தோனேசியர் ஆகலாம்.