பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலரும் பாப் பாடகருமான நிக் ஜோனாஸுக்கும் இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
2017-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்கு பிரியங்காவும் நிக் ஜோனாஸும் ஒன்றாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல இடங்களில் இருவரும் ஒன்றாகச் சுற்றுவது குறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. காதலர்களாக உள்ள 36 வயது பிரியங்காவும் 25 வயது நிக் ஜோன்ஸும் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.
இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிக் ஜோன்ஸின் பெற்றோர் கடந்த வியாழன் அன்று மும்பைக்கு வந்திறங்கினார்கள். இன்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்தது.