ஈரான் போர்! இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது: ராகுல்
எரிவாயு தட்டுப்பாடு குறித்து இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது என்று மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
எரிவாயு தட்டுப்பாடு குறித்து இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவையில் எரிவாயு தட்டுப்பாடு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் "மத்திய கிழக்கில் ஒரு போர் வெடித்துள்ளது. போரில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தப் போர் பெரிய மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகிதம் மேற்கொள்ளப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.
நமது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருவதால், இது நமக்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.
இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது. உணவகங்கள் மூடப்படுகின்றன, எல்பிஜி தட்டுப்பாடு பற்றிய பரவலான அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொடக்கம் மட்டுமே.
ஒரு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புதான் அதன் அடித்தளம். நாம் யாரிடமிருந்து எண்ணெய் வாங்குகிறோம், யாரிடமிருந்து எரிவாயு வாங்குகிறோம், ரஷியாவிடமிருந்து வாங்கலாமா வேண்டாமா என்பதை அமெரிக்கா தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறது.
ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்க வேறொரு நாடோ வேறு நாட்டின் அதிபரோ ஏன் அனுமதிக்க வேண்டும்?
இதற்கான புதிரை நான் கண்டுபிடித்து விட்டேன். இந்தப் புதிர் சமரசம் பற்றியது. இங்கு அமர்ந்திருக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் எப்ஸ்டீனின் நண்பர் என்று அவரே கூறினார்" என்று தெரிவித்தார்.