முதல் வாரம் இந்தியாவில் ரூ. 63 கோடி வசூலித்த பேட்மேன் படம், இரண்டாவது வார இறுதியில் மிகக்குறைவான வசூலையே அடைந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ரூ. 2.10 கோடியும் சனியன்று ரூ. 3.15 கோடியும் ஞாயிறன்று ரூ. 3.78 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது பேட்மேன். முதல் வார வசூலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ. 72 கோடி வசூலித்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இத்தகவல்களை பாலிவுட் விமரிசகர் தரன் ஆதர்ஷ் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியானது. அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.