செய்திகள்

திரைத்துறையில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்: முக்கிய பிரச்னையை விரிவாக விளக்கும் தயாரிப்பாளர்!

எழில்

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், மார்ச் 1 ஆம் தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.

கியூப், யு.எஃப்.ஓ. ஆகிய நிறுவனங்கள் தமிழகத் திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வெவ்வேறு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுக்கும் வரைக்கும் அதிக நாட்களுக்கு ரூ.34,000 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்துக்குத் திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும்.  இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அதே சமயத்தில், பிற நிறுவனங்கள் குறுகிய காலத்துக்குத் திரையிட ரூ.4,000 , நீண்ட காலத்துக்கு ரூ.12,000 கட்டணமாகப் பெறத் தயாராக உள்ளன. ஆனால், கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் அதிக தொகையைக் கேட்கின்றன. திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாகப் பெற்று வருவதைக் கண்டித்தும் சிறியமுதலீட்டுப் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்குத் தீர்வு காணும் விதமாகவும் வேலை நிறுத்தத்தைத் தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து ஃபேஸ்புக்கில் விரிவாக விளக்கியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு. 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படம் - 'அருவி'. 

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எஸ்.ஆர். பிரபு எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவு:

திரைப்பட வெளியீடு நிறுத்தம் சம்பந்தமாக பொறுமை/ ஆர்வம் கொண்டவர்களுக்காக என் தனிப்பட்ட நீண்ட கருத்து:

திரையரங்குகள்

திரையரங்குகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு திரையரங்கம் என்பது எப்படி இருக்கைகள், கழிப்பறை, பார்க்கிங் மற்றும் இதர வசதிகளை உள்ளடக்கியதோ அதே போல் புரொஜக்டர் வசதியும் அதனுள்ளயே அடங்கும். ஃபிலிம் புரொஜக்டர்-கள் மூலம் படங்கள் ஒளிபரப்பப்பட்டவரை எந்தக் குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. ஒரு திரையரங்கத்திற்கு டிக்கெட் விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அதனுடன் சேர்த்து விளம்பரம், பார்க்கிங் மற்றும் கேன்டீன் வருவாயும் வந்துகொண்டிருக்கிறது.

அனலாக் ஃபார்மட் முறை

ஒரு படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கும் பொழுது ஒரு ஏரியா உரிமம் வாங்கும் விநியோகஸ்தர், அவர் வெளியிடும் திரையரங்க எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பிரிண்ட் காப்பி-கள் (படப்பெட்டி) வாங்கி வெளியிடுவார். அந்தச் செலவுகள் விநியோக உரிமத்துடன் கூடுதலாக ஒரு பிரிண்ட்டுக்குச் சுமார் ரூ. 40000 ஆக இருந்தது. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உள்ள புரிதலில் இந்தச் செலவு இருவரில் எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் பொதுவாகவும் இருந்து வந்தது. திரையரங்கத்திற்குப் படம் உறுதி ஆனவுடன் பெட்டி அனுப்பி வைக்கப்படும். அதைத் திரையரங்க ஆபரேட்டர் திரையரங்கிற்குச் சொந்தமான புரொஜக்டரில் படத்தை ஓட்டுவார்.

ஃபிலிம் சார்ந்த செலவுகள்

இந்த தொழில் ஓரளவு சுமூகமாக நடந்து வந்த ஒரு கட்டத்தில் ஃபிலிம் விலை அதிகரிக்க ஒரு பிரிண்ட் ரூ. 50000 -ஐ தாண்ட ஆரம்பித்தது, இதனால் 100 திரையரங்கில் ஒரு படத்தை வெளியிட ரூ.50 லட்சம் வரை செலவானது. மேலும் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 50 லட்சம் ஃபிலிம் கேமரா-வில் படம்பிடிக்க (ஃபிலிம் செலவு + நெகடிவ் டெவலப்மெண்ட்) செலவானது. படம் எடுப்பதும் அதிக முதலீடு கொண்ட ஒரு துறையாக இருந்து வந்தது.

டிஜிடல் ஃபார்மட் அறிமுகம்

இந்நிலையில் டிஜிடல் புரொஜக்சன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு ஃபிலிம் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஃபிலிம் நெகடிவ்-ல் இருந்து டிஜிடல் ஆக ஸ்கேன் செய்து மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. டிஜிடல் கேமரா வந்தவுடன் ஃபிலிம் செலவு / டெவலெப்மண்ட் செலவு குறைந்து அனைவரும் டிஜிடல் முறையே விரும்ப ஆரம்பித்தனர். இதில் ஒரு பிரிண்டுக்கு வெறும் ரூ. 25000 மட்டுமே செலவானது. தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் சந்தோசமாக டிஜிடலை விரும்ப ஆரம்பித்தனர். முற்றிலும் டிஜிடல் மயம் ஆனது. திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவு குறைந்து நிறைய தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.

நிற்க!

முன்பு தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் செய்த செலவை விட இன்று குறைவாக தானே செலவாகிறது?

டிஜிட்டல் டெக்னாலஜியால் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டும் / வெளியிடப்பட்டும் வருகிறதே? பின் எதற்கு இந்தப் போராட்டம்?

பொறுமையுடன் கீழே படியுங்கள். இதில் மறைந்து உள்ள முழுப் பூசணிக்காயை அடையாளம் காட்டுகிறேன்!

தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் / திரையரங்க உரிமையாளர் ஆகிய இந்த மூன்று வர்க்கத்தினரின் அறியாமை டிஜிடல் வசதி வழங்க வந்த சில நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு இந்த 10 வருடத்தில் சுமார் ரூ. 1500 கோடிகளை முதலீடு செய்தும், 90% திரையரங்குகள் இன்று சொந்த புரொஜக்டர் இல்லாமலும், காலம்காலமாகச் சம்பாதித்து வந்த விளம்பர வருவாயை இழந்தும் உள்ளனர். இதை திரைத்துறையில் சமீபத்தில் நடந்த ஒரு மிகப்பெரும் ஊழலாகவே நான் பார்க்கிறேன்.

விபிஎஃப் - Visual Projection Fee

டிஜிடல் தான் வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் என்பதால் வெளிநாடுகளில் சோனி போன்ற பன்னாட்டுத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் திரையரங்குகளை டிஜிடல் முறைக்கு மாற்ற கூறியபோது ஒரு திரையரங்கத்திற்கு டிஜிட்டல் புரொஜக்டர் மற்றும் அதன் பிளேயர் அடங்கிய சர்வர் இவற்றை இன்ஸ்டால் செய்ய சுமார் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை செலவானது. இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் செலவுகளைக் குறைக்க நாங்கள் எதற்கு இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என திரையரங்குகள் மறுத்தனர். இந்தச் சிக்கலை தீர்க்க டிஜிட்டல் உபகரண நிறுவனங்கள் மற்றும் திரைத்துறையினர் ஒரு வழி கண்டனர். அப்பொழுது உருவானது தான் VPF (Visual Projection Fee) முறை. 

அதாவது இந்த புரொஜக்டர் மற்றும் சர்வரை டிஜிடல் சர்வீஸ் புரொவைடர்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு ஒரு படத்திற்கு சுமார் ரூ. 20000 வீதம் 5 வருடங்களுக்குப் படம் வெளியிடுபவரிடம் பெற்றுக்கொள்வது எனவும் இந்தக் கருவிகள் + பிராசஸ் செலவுகள் மீட்டெடுத்த பின்னர் புரொஜக்டர் அந்தத் திரையரங்கத்திற்குச் சொந்தம் எனவும், டிஜிடல் சர்வீஸ் புரொவைடர்ஸ் (டிஎஸ்பி) அதற்குப் பின்னர் வெறும் சர்வீஸ் கட்டணம் (Service Fee) மட்டும் பெற்றுக்கொள்வது எனவும் உலகளாவிய முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முறையில் உலகம் முழுக்க 2018 -க்குப் பின் விபிஎஃப் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால்தான் இங்கு 5 வருடத்திற்கு மேல் ஆன திரையரங்குகளுக்கு ஆங்கிலப் படங்களுக்கு விபிஎஃப் இல்லை. வெறும் சர்வீஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏமாந்தது வழக்கம் போல் இந்தியர்கள்தான்.

இந்திய திரையுலகம் ஏமாந்த முறை

இங்கு டிஜிடல் மாற்றம் ஆரம்பித்த காலத்தில் ஒரு சில திரையரங்குகள் டிஜிடல் புரொஜக்டரைச் சொந்தமாக வாங்கினர். திரையரங்குகள் புரொஜக்டர் வாங்க தயக்கம் காட்டிய பொழுது, டிஎஸ்பி நிறுவனங்கள் நாங்களே உங்களுக்கு புரொஜக்டர் இலவசமாக தருகிறோம் என்றனர். மேலும் பிரிண்ட் செலவில் பாதி செலவுதான் ஆகும் என்றபோது, அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்க இந்தப் பத்திரத்தில் கையெழுத்து போட்டால் போதும், கூடவே விளம்பர வருவாயை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றனர். புரொஜக்டர் பணம் வசூல் ஆனவுடன் விளம்பர வருவாயை நாம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. அப்போது விளம்பர வருவாய் அதிகம் இல்லாத காலத்தில் திரையரங்கு உரிமையாளருக்கு அது ஒன்றும் பெரியதாக தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் ஒரு புரொஜக்டர் திரையரங்கில் பொருத்தப்பட்டு அதற்கான முதலீடு விபிஎஃப் மற்றும் விளம்பர வருவாய் மூலம் ஈட்டப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இன்னும் விபிஎஃப் முன்பை விட அதிகம் கேட்கப்படுகிறது.

தயாரிப்பாளர் / விநியோகஸ்தர், இந்நேரம் புரொஜக்டர் சொந்தம் ஆகி இருக்க வேண்டுமே எனக் கேட்க ஆரம்பித்த பின்னர்தான் அனைவருக்கும் பேரதிர்ச்சியான செய்தி வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் சேவை ஒப்பந்தகள். உங்களுக்கு இந்த புரொஜக்டர் எதுவும் சொந்தம் இல்லை. நீங்கள் வேண்டுமானால் வேறு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் 6 மாதத்தில் இருந்து 1.5 வருடம் முன்பாக இதைத் தெரிவிக்கவேண்டும், ஒப்பந்தத்தை முறித்தால் நீங்கள் கையெழுத்திட்ட காலம் முடியும் வரை வருடம் ரூ. 10 லட்சம் வரை ( E- Cinema projector விலையே வெறும் ரூ. 6 லட்சம்தான்) எங்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என்பன போன்ற கழுத்தை நெறிக்கும் ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்திட்டு இருப்பது வெளிச்சம் ஆகி உள்ளது. நிறைய பேருடைய ஒப்பந்தங்கள் முடிந்தபோது வேறு பழைய/ புது புரொஜக்டர், பல்பு, சவுண்ட் சிஸ்டம் என ஏதாவது ஒன்று இலவசமாகத் தரப்பட்டு அவர்களிடம் முற்றிலும் ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்து போட்டுள்ளார்கள். 

தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பல முறை விபிஎஃப் பற்றிய விஷயங்களைப் பேச முற்படும்போதெல்லாம் அசிங்கப்பட்டதற்கு அவர்கள் போட்டுள்ள இந்த கிடுக்குப்புடி ஒப்பந்தங்கள்தான் காரணம். இந்த ஏமாற்று விஷயங்கள் தெரிந்த சில திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்துக் கேட்டபோதெல்லாம் அவர்களுக்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கும் விபிஎஃப் அல்லது விளம்பரத்தில் பங்கீடு அதிகமாக தந்தோ, இன்னும் ஹைடெக் உபகரணங்கள் இலவசமாக தந்தோ வாயடைக்கப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் முந்தைய நஷ்டங்களால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மீதுள்ள கோபத்தினாலும் சில முக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் டிஎஸ்பி-க்கு எதிராகப் பேசாமல் மௌனம் காக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து பல திரையரங்கு உரிமையாளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.

ஒரு தொழில்நுட்ப மாற்றம் நடைபெறுவதற்காகத் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் முதலீடு செய்தது, இன்று திரைத்துறையினர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அடிமையாகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இரண்டு மணி நேர படம் பார்க்க 20 நிமிடங்கள் விளம்பரம் மக்கள் பார்க்க வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் விளம்பரம் அவர்கள் படத்துடன் இணைக்கவே காசு கொடுத்து அதுவும் இவர்கள் நினைத்தால்தான் போட முடியும் எனும் கொடூரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விநியோகஸ்தர் சங்கம் இது தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர் பிரச்சினை என்று நினைக்கிறது போலும், நடுநிலை காப்போம் என்று இருக்கிறது.

காலம் காலமாக ஏமாந்து வந்த தயாரிப்பாளர்கள் இனிமேலும் ஏமாற முடியாது எனும் நிலை வருகையில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஒரு வருடத்தில் படம் தயாரிப்பவர்களில் 70%- 80% புதுத் தயாரிப்பாளர்களே, இவர்களில் 90% மேல் மொத்த முதலீட்டையும் இழந்து வெளியேறி விடுகின்றனர். மொத்தம் இழக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு இந்த விபிஎஃப் 3% கண்ணுக்கே புலப்படாத ஒன்றாகும்.

ஒட்டு மொத்தமாக ஒரு வருடத்தில் ரூ. 40 கோடிக்கும் மேல் விபிஎஃப் மூலம் தயாரிப்பாளர்கள் இழக்கின்றனர். திரும்பிப் படம் எடுக்கவே கஷ்டமான சூழ்நிலையில் இந்த விஷயத்தைப் பார்க்க தனி தயாரிப்பாளரால் முடியாது. ஆகவேதான் இந்த மொத்தப் போராட்டமும் தயாரிப்பாளர் சங்கத்தின் தோள்களில் உள்ளது. ஆனால் யார் என்னமோ ஆகட்டும், என் படம் வெளியானால் போதும் என்ற ஒரு தயாரிப்பாளர் சுயநலத்துடன் இருந்தால் அனைத்துத் தரப்பினரும் வருமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும். கடந்த 20 வருடங்களாகத் தமிழ்த் திரைதுறை ஒற்றை இலக்க வெற்றி சதவீதத்தை மட்டுமே கொண்டு இயங்கி வந்தாலும் சினிமா மீதுள்ள அதீத பிரியத்தினால் தான் இந்தத் துறை இன்னும் தாக்குப் பிடித்து வருகிறது. சுயநலம் மட்டுமே நோக்கமாக இருந்தால் இதற்கு மேலும் இந்தத் துறை தாங்குமா என்பது சந்தேகமே.

போராடுவதே நம் கடமை ஆகட்டும், அதற்குக் காலம் பதில் சொல்லட்டும் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT