நடிகை ஸ்ரீதேவி உடலை ஒப்படைக்க துபை காவல்துறை அனுமதி!
ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என துபை அரசு வழக்கறிஞர் கடிதம் வழங்கியுள்ளார்...
நடிகை ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபை காவல்துறை அனுமதியளித்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவி துபையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல் கிடைத்தது. இது திரையுலகினரையும், ஏராளமான அவரின் ரசிர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
துபை ஹோட்டலில் உள்ள அறையில் குளிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் (பாத் டப்) சுயநினைவில்லாமல் தவறி விழுந்து மூழ்கி ஸ்ரீதேவி மரணமடைந்ததாக துபை அரசு நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் துபை அரசின் செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவுகளில், 'சுயநினைவை இழந்த நிலையில் ஹோட்டலில் உள்ள குளிக்கும் தண்ணீர் தொட்டியில் இருக்கும் நீரில் விழுந்து ஸ்ரீதேவி மூழ்கியதாலேயே உயிரிழந்துள்ளார். ஸ்ரீதேவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து முடித்த பிறகு, இந்த முடிவுக்கு காவல்துறை தலைமையகம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை, சட்ட நடைமுறைகளை கையாளும் அமைப்புக்கு (துபை பப்ளிக் புராசிக்யூஷன்) காவல்துறை மாற்றியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துபை காவல் நிலையத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் இந்தியத் தூதரகப் பிரதிநிதிகள் மூவரும் காலை 8 மணி முதல் அனுமதிக்காகக் காத்திருந்தும் அவர்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால் இரு தரப்பினரும் காலை 11.30 மணிக்கு காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்கள் என்று கூறப்படுகிறது. வழக்கு விசாரணையிலும் அனுமதி அளிப்பதிலும் சட்ட ரீதியாக எவ்விதச் சிக்கல்களும் வரக்கூடாது என்பதற்காக அனைத்து நடைமுறைகளையும் தீவிரமாகப் பரிசீலித்து வந்தது.
இந்நிலையில் காவல்துறையின் விசாரணை முடிவடைந்த நிலையில் ஆவணங்கள் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்ரீதேவி உடலை ஒப்படைக்க துபை காவல்துறை அனுமதியளித்துள்ளது. ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என துபை அரசு வழக்கறிஞர் கடிதம் வழங்கியுள்ளார்.
அனுமதிக் கடிதம் கிடைத்துள்ளதால் ஸ்ரீதேவியின் உடலுக்கு உடனடியாக எம்பாமிங் செய்யப்படவுள்ளது. இதனால் இன்றிரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்குக் கொண்டுவரப்படலாம் என்று அறியப்படுகிறது.