இயக்குநர் மணி ரத்னம் நலமுடன் உள்ளார்: நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திக்கு மறுப்பு!
வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு மணி ரத்னம் இன்று சென்றிருந்தார்...
பிரபல இயக்குநர் மணி ரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வரும் படம் - செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்.
இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மணி ரத்னம் இன்று அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ராவணன் படத்தை இயக்கியபோது மணி ரத்னத்துக்கு முதல்முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன்பிறகு ஓ காதல் கண்மணி படத்தை இயக்கியபோது மீண்டும் அதே நெஞ்சு வலியால் தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தார்கள்.
Advertisement
இந்நிலையில் மணி ரத்னத்தின் செய்தித்தொடர்பாளர் நிகில் ட்விட்டரில் தெரிவித்ததாவது: வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு மணி ரத்னம் இன்று சென்றிருந்தார். அவர் நலமுடன் உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.