பா. இரஞ்சித் படம் போல இருக்குமா 'பரியேறும் பெருமாள்'?: இயக்குநர் பதில்!
பிரச்னைகளை எளிமையான முறையில் சொல்கிறது என் படம். பிரசாரம் செய்வதுபோல இருக்காது...
"அட்டகத்தி', "மெட்ராஸ்', "கபாலி' ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், "பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது. காதல், ஆக்ஷன் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு.
இந்நிலையில் பா. இரஞ்சித் தயாரிப்பில் வெளிவரும் படம் என்பதால் அவருடைய பாதிப்பு இந்தப் படத்தில் இருக்குமா என்கிற கேள்விக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதில் அளித்ததாவது:
பிரச்னைகளை எளிமையான முறையில் சொல்கிறது என் படம். பிரசாரம் செய்வதுபோல இருக்காது. என்னுடைய கதாநாயகன் ஒரு மாணவன். சட்டக்கல்லூரியில் படிக்கும் அவன், உலக நடப்புகளை அறிந்துகொண்டபிறகு மாறுபவன். பார்க்க வெள்ளந்தியாகவும் நல்ல நடிகராகவும் உள்ளவர் எனக்கு கதாநாயகன் வேடத்துக்குத் தேவைப்பட்டார். விக்ரம் வேதா படத்தில் கதிர் அதுபோல நடித்திருப்பார். எனவே அவரைத் தேர்வு செய்தேன்.
என் எழுத்துகளைப் படிக்கும் ரஞ்சித் அண்ணா, எப்போதும் என்னை உற்சாகப்படுத்துவார். படம் தயாரிப்பது என அவர் முடிவு செய்தபிறகு, என்னிடம் கதை ஏதாவது உள்ளதா என்று கேட்டார். அப்போதுதான் இப்படத்தின் கதையைச் சொன்னேன். ஒருவரியில் கதையைச் சொன்னவுடன் ரஞ்சித் அண்ணாவுக்குப் பிடித்துவிட்டது. தான் தயாரிக்கும் முதல் படம் நல்ல கதையுடன் இருக்கவேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். அவர் என்னைத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள், இந்த மாதம் வெளிவரவுள்ளது.