துருக்கி கடல்பகுதியில் ஆப்கன் அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!
துருக்கி கடல்பகுதியில் ஆப்கன் அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 19 பேர் பலியானது குறித்து...
துருக்கி கடல்பகுதியில், ஆப்கன் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 19 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறும் நோக்கில் சுமார் 40 அகதிகள் பயணித்த படகு ஒன்று துருக்கியின் ஏகன் கடல்பகுதியில் புதன்கிழமை (ஏப். 1) அன்று சென்றுக் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கடல்பகுதிக்குள் நுழைந்த படகை துருக்கியின் கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் மிகவும் வேகமாக இயக்கப்பட்ட அந்தப் படகு விபத்துக்குள்ளாகி பிரபல சுற்றுலாத் தலமான போத்ரமின் கடலில் கவிழ்ந்து மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலியான 1 குழந்தை உள்பட 19 பேரின் உடல்கள் துருக்கியின் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் மூலம் இதுவரை 21 ஆப்கன் அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், மாயமான ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. துருக்கியின் போத்ரம் நகரின் மிக அருகில் கிரீஸ் நாட்டின கோஸ் உள்ளிட்ட தீவுகள் அமைந்துள்ளன.
மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் பஞ்சம், போர் ஆகியவற்றில் இருந்து தப்பித்து ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேற நினைக்கும் அகதிகள் கிரீஸ் தீவுகளின் வழியாக ஊடுறுவ முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.