ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தைக் கொண்டாடுவதா?: இயக்குநர் மீரா கதிரவன் கேள்வி!
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எப்படிச் சான்றிதழ் கொடுத்தார்கள்? இதற்குப்பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது...
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்தப் பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ. கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபி சரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களான சபரிமாலா, கம்பம் குணாஜி, விவசாயிகள் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயி செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது:
மூன்று படங்களை இயக்கிவிட்ட ராகேஷ் நினைத்திருந்தால், எங்கேயாவது இருட்டு அறையில் முரட்டு குத்து குத்தி ஒரு படத்தை எடுத்து காசு பார்க்கக் கிளம்பியிருக்கலாம். ஆனால் அவர் காவிரி நீரை பற்றி படம் எடுக்க முன்வந்ததற்காக அவருக்குத் தலைவணங்குகிறேன்.. ஜல்லிக்கட்டு, காவிரி, நீட் தேர்வு என ஒருபக்கம் இளைஞர்கள் போராட, இன்னொரு பக்கம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைக் கொண்டாடுவதும் நம் இளைஞர்கள்தான், இங்கே உளவியல் ரீதியான சிக்கல் இருக்கிறது. அதைச் சரிசெய்யவேண்டும்.
இங்கே தணிக்கை வாரியம் அமைப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என் படங்களில் சின்ன விஷயங்களில் கூட பெரிய அளவில் ஆட்சேபணை தெரிவித்த தணிக்கை வாரியம், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எப்படிச் சான்றிதழ் கொடுத்தார்கள்? இதற்குப்பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. இதுபோன்ற படங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தைப் போராட்ட களங்களில் இருந்து திசைதிருப்ப மறைமுகமாக முயற்சிக்கிறார்கள் என்று பேசினார்.