தேர்தல் பிரசாரத்தில் பாட்டில் வீச்சு! தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்க தவெக கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்குமாறு கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்குமாறு கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக சார்பில் நிர்மல் குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரசாரத்தில் பாட்டில் வீசப்பட்டது குறித்து நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எங்கள் வேட்பாளர்களுக்கோ தலைவருக்கோ பாதுகாப்பு என்பதே இல்லை. இது வேண்டுமென்றே திமுகவால் உருவாக்கப்பட்ட ஒன்று.
எங்கள் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரசாரத்தில் இடையூறு விளைவிக்கவே இவ்வாறு செய்கின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணைய தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், முறையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கரூரிலும் தவெகவின் பிரசாரத்தில் ஆம்புலன்ஸ்கள் மூலம் இடையூறு தரப்பட்டதாகவும் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, "பிரசாரத்தின்போது, பல காலியான அவசர ஊர்திகள் கூட்டத்தினுள்ளே அனுப்பப்பட்டன. திமுக என்னென்ன செய்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஒரு கூட்டம் நடக்கும்போது, கூட்டத்தினுள் 10 அவசர ஊர்திகளை விடுவது, 10 ஊர்திகளும் காலியாகவும், அவற்றின் ஓட்டுநர்களும் முழு போதையில் வருகின்றனர். போதையில் வந்த அவசர ஊர்தி ஓட்டுநர்களைப் பிடித்த தவெக நிர்வாகிகள், காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களைக் காவல்துறை காப்பாற்றி அனுப்பி விட்டது" என்றும் நிர்மல் குமார் கூறினார்.