மே 28 2011, மறக்க முடியாத நாள்: செளந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்!
செளந்தர்யா ரஜினிகாந்த், மே 28-ம் தேதியை முன்வைத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்...
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.
கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலா படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் என்பது அதன் தணிக்கைச் சான்றிதழ் வழியாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காலா பட டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், மே 28-ம் தேதியை முன்வைத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மே 28, 2011. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. சிகிச்சைக்காக அப்பாவை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற தினம். கடவுளின் கருணையால், நல்ல உடல்நலத்துடன் அப்பா திரும்பி வந்தார். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. ஏழு வருடங்கள் கழித்து, உங்களுடைய அன்புக்காக இதை (டிரெய்லர்) வெளியிடுகிறோம் என்றார்.