சர்கார் படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும்: அரசுத் தரப்பு
அரசின் நலத்திட்டங்களை சர்கார் படத்தில் விமரிசித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்...
விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவானது. இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சில திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் படம் வெளியான இரு நாள்கள் கழித்து காவலர்கள் குவிக்கப்பட்டார்கள். அன்றைய நாளின் நள்ளிரவுக்குப் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே காவலர்கள் அவரது வீட்டில் குவிக்கப்பட்டதாகக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
Advertisement
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அரசின் நலத்திட்டங்களை சர்கார் படத்தில் விமரிசித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமரிசிக்க மாட்டேன் என உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் கோரிக்கை குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்கமளிக்க உத்தரவிட்டு, முன்ஜாமீன் வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.