கடந்த சில நாட்களாக 'மீடூ' அலை பரவலாக அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் மீடூ குறித்து தனது கருத்தை அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது லுவ் ராஜன் தயாரிக்கும் 'தி தி பியார் தி' என்ற ஹிந்திப் படத்தில் அஜய் தேவகானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரகுல். தற்போது லுவ் ராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது தனக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகக் கூறினார். இப்பிரச்சனையில் எது சரி, எது தவறு என்று நான் கூற விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை ராஜன் சிறந்த மனிதர் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
ஒரு பெண்ணை கற்பழிப்பது, பாலியியல் ரீதியாக வற்புறுத்துவது போன்று தவறாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதற்கும், ஒருவரிடம் தவறாக நடந்து கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. மீடூ இயக்கத்தில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன. எது உண்மையில் நடந்தது. எது நடக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை. காரணம் அதை விட பெரிய சம்பவங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பிரச்னையை வெளிப்படுத்த உதவிய சமூக வலைதளத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இது போன்ற சம்பவங்களைக் கேட்கும் போது மனம் பாதிப்படைகிறது. தனக்கு நேர்ந்த பாலியல் தொந்திரவுகளை வெளியில் சொல்ல மிகப் பெரிய தைரியம் தேவை. இப்படி பெண்கள் தங்களுக்கு நடந்த கொடூரமான அனுபவங்களை வெளியில் சொல்ல முன் வந்துள்ளனர். இவர்களுக்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் உண்டு. இந்தப் பிரச்னையில் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்புவது நல்ல விஷயம். ஒன்று பட்டால் வலிமை அதிகரிக்கும். மீடூ இயக்கம் மக்களின் கவனத்தைப் பெற்று வருவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். பெண்களுக்கு எதிராக பல்வேறு துறைகளில் இத்தகைய பாலியல் தொந்தரவுகள் இருந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் இது போன்ற பிரச்னையை சந்தித்ததில்லை.
மக்கள் வெளிப்படையாக தைரியமாக வந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அவர்கள் ஒரு போதும் தவறாக பயன்படுத்தக் கூடாது. ஒரு வழியாக பெண்களின் குரலையும் மக்கள் கேட்கிறார்கள் என்பது நல்ல விஷயம். இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனி பெண்கள் வேலை பார்க்கும் இடம் பாதுகாப்பான இடமாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.