முகப்பு
செய்திகள்

‘சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஏ.ஆர். முருகதாஸ்’

நமக்கு முன்னால் ஓர் உதவி இயக்குநர் பதிவு செய்துள்ளதால் அவரைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள சர்கார் படத்தின் கதை தொடர்பான வழக்கில் மனுதாரர் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் பட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. எனினும் சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தும் தனக்கானதே என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார். 

கத்தி படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து சர்கார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்ததை அடுத்து தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராஜேந்திரன் என்பவர் "செங்கோல்' படத்துக்காக எழுதிய கதையைத்தான் முருகதாஸ்  "சர்கார்' படமாக எடுத்துள்ளதாகவும், இரு கதைகளும் எழுத்தாளர் சங்கத்தில் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது என்றும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் பெயரிலேயே வழக்குப் பதிவு செய்கிறேன்' எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.   மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  "இயக்குநர் முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய மூன்று தரப்பும் வரும் 30-ஆம் தேதிக்குள் ஆஜராகி பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்ததாவது: பேசித் தீர்க்க நினைத்தோம். இரு கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். செங்கோல் கதையைத் தழுவியே சர்கார் கதை உள்ளது என்று பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறினர். முருகதாஸிடம் பேசி பிரச்னையைத் தீர்க்க நினைத்தோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஆரம்பத்திலிருந்தே வழக்குத் தொடர்வதில் ராஜேந்திரன் தெளிவாக இருந்தார். அவர் பக்க நியாயத்துக்காக அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்வதை தடை செய்யவில்லை என்று கூறினார்.

Advertisement

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் மனுதாரர் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளது,  சமரச முடிவு குறித்து மனுதாரரின் வழக்கறிஞருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுள்ளதாக சன் பிக்சர்ஸ் மற்றும் முருகதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. மனுதாரர் தரப்பில், படக்கதை தொடர்பாக டைட்டில் கார்டில் எழுத்தாளர் வருணுக்கு நன்றி என்று குறிப்பிட ஒப்புக்கொண்டார்கள். ரூ. 30 லட்சம் கேட்டதில் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. மேலும் படத்தை வெளியிடத் தடையில்லை என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

வழக்கம்போல் வதந்திகள் இஷ்டத்துக்கும் பரவிக்கொண்டிருக்கின்றன. அதற்காகச் சின்ன விளக்கம். மதிப்பிற்குரிய பாக்யராஜ் என்னை அழைத்து இப்படியொரு பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. ஒருவரின் ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள் என்பது அவர் பத்து வருடத்துக்கு முன்பு பதிவு செய்துள்ளார். அந்தக் கரு இந்தப் படத்துடன் ஒன்றாக உள்ளது. மற்றபடி அந்தக் கதைக்கும் அந்தக் கதைக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. ஆனால் நமக்கு முன்னால் ஓர் உதவி இயக்குநர் பதிவு செய்துள்ளதால் அவரைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில்  டைட்டில் கார்டின் தொடக்கத்தில் ஒரு குறிப்பு வையுங்கள் என்றார்.  சரியென்று ஒப்புக்கொண்டேன். மற்றபடி இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஏ.ஆர். முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையவே கிடையாது. தீபாவளி நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மேலும் எழுத்தாளர் சங்கத்துக்கு அளித்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். பிறகு கதை, திரைக்கதை, இயக்கம் - ஏ.ஆர். முருகதாஸ் என்று குறிப்பிடப்படும் புகைப்படத்தையும் அவர் கூடுதலாக வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments