தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்
தேர்தலில் போட்டியிடாதது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று(ஏப். 3) வெளியானது.
மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசியில் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை. அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்நிலையில் அண்ணாமலை இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"நான் தேர்தலில் போட்டியிடாதது குறித்து பல யூகங்களை சமூக ஊடகங்களில் பலரும் எழுதுகிறார்கள். நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று நீண்ட நாள்களுக்கு முன்பாகவே எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி கொடுத்திருந்தேன். மாநிலத்தில் மையக்குழு கூட்டத்தில்கூட என்னுடைய கருத்தை நான் சொல்லியிருந்தேன். மையக்குழுவில் இருந்து தலைமைக்குச் சென்ற பட்டியலில் என் பெயர் இல்லை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய தலைவர் நிதின் நவீன் ஆகியோரிடம் நான் இதுபற்றி பேசியிருந்தேன்.
அதன்படி கட்சி என்னுடைய விருப்பத்தின்பேரில் என்னை பிரசாரத்திற்கு பயன்படுத்தியது எனக்கு மகிழ்ச்சிதான். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரசாரம் செய்யவிருக்கிறேன், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை, நான் எந்த தொகுதிக்கும் போட்டியிடவில்லை. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கோவையில் ஏற்கெனவே எம்எல்ஏ இருக்கிறார்கள். அவர்கள் போட்டியிடுவதுதான் சரியானது. அதேபோல மொடக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் கட்சிப் பணி செய்பவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் நான் கடந்த 45 நாள்களில் நான் யாரிடமும் எந்த தொகுதியும் கேட்கவில்லை, நான் கேட்கவும் மாட்டேன், அது என்னுடைய பழக்கமும் இல்லை" என்று விளக்கமளித்தார்.
Former Tamil Nadu BJP President Annamalai explains why he did not contest the election.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.