சொத்து மதிப்பு ரூ.84 மட்டும்! தேர்தலில் களம் காணும் வேட்பாளர்!
கேரள தேர்தலில் களம் காணும் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.84 மட்டுமே என்பது தொடர்பாக....
கேரள பேரவைத் தேர்தலில் களம் காணும் பெண் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.84 மட்டும் என தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளம் உள்பட தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் கேரளத்தில் வரும் ஏப்.9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தையும் வாக்கு சேகரிப்பையும் தொடங்கியுள்ளன. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
Advertisement
கேரள பேரவைத் தேர்தலில் ஏட்டுமானூர் தொகுதியில் இந்திய சோஷலிச ஐக்கிய மையத்தின் (கம்யூனிஸ்ட்) (எஸ்.யூ.சி.ஐ.) சார்பில் வேட்பாளராகக் களமிறங்கும் ஆஷ்னா தம்பி (26) சொத்து மதிப்பாக ரூ. 84 என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதழியல் பட்டதாரியான இவர் கையில் ரூ.44 ரொக்கமாகவும், வங்கிக்கணக்கில் ரூ.40 வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நிலம், தங்கம், வெள்ளி போன்ற எந்தவித அசையும், அசையா சொத்துக்களும் தன்னிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலுக்கான செலவுகளை மக்களிடமிருந்து நிதியாகப் பெற்று, அதனை வைத்து மக்களுக்குப் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.