திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது குறித்து...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபாட்டனர்.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, நாள்தோறும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் கோயிலில் அமைந்துள்ள திருவாச்சி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது
விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய முருகபெருமானுக்கு நவரத்தினங்களுடன் கூடிய கிரீடம் மற்றும் செங்கோல் வழங்கி வேதமந்திரங்களோடு, மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
முருகபெருமான் பட்டாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா கோஷம் முழங்கிட முருகனை வழிபட்டனர்.
தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (ஏப். 4) திருக்கல்யாணமும், நாளை மறுநாள் (ஏப்.5) திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழு மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.