இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்குப் பதிவு
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா. இரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது...
ராஜராஜ சோழன் மீது அவதூறான கருத்துகளைக் கூறியதாக இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களில் சோழ மன்னனான ராஜராஜ சோழன் சிறப்பிடம் பெற்று விளங்கியவர். ராஜராஜ சோழனால் எடுக்கப்பட்ட தஞ்சை பெருவுடையார்கோயில் தமிழகத்திற்கு பெருமை அளிக்கும் வகையில் உயர்ந்து காணப்படுகிறது. இக்கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, உலோகத்திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக்கலை, இங்கு காணப்படும் கல்வெட்டுகள் போன்ற அனைத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குநர் பா. இரஞ்சித் கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது, சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப்பறிப்பு போன்றவை ராஜராஜ சோழன் காலத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டார். ஒடுக்கப்பட்ட சமூகம், தன்னுடைய நில உரிமையை ராஜராஜ சோழன் காலத்தில் தான் இழந்தது. இதனால் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் தான் இருண்ட காலம் என்று பேசினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித்தைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா. இரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சாதி, இனம், மொழி மூலம் மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.