2019-ல் விரைவாக ரூ. 100 கோடி வசூலை அடைந்த ஹிந்திப் படம் என்கிற பெருமையை கேசரி படம் பெற்றுள்ளது.
வெளியான 7-வது நாளில் ரூ. 100 கோடியைத் தொட்டுள்ளது. நேற்றுடன் இந்தப் படத்தின் வசூல் இந்தியாவில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது.
இதன்மூலம் 2019-ம் வருடம் 7 நாள்களில் இந்த இலக்கை அடைந்த முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. 8 நாள்களில் கல்லிபாய் படமும் 9 நாள்களில் டோட்டல் தமால் படமும் ரூ. 100 கோடி வசூலை எட்டின.
அக்ஷய் குமார், பரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - கேசரி. இப்படத்தின் இணை தயாரிப்பாளர் கரன் ஜோஹர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 36-வது சீக்கியப் படையைச் சேர்ந்த 21 வீரர்கள், 10000 பேர் இணைந்த ஆப்கன் தாக்குதலை எதிர்கொண்ட விதம்தான் இப்படத்தின் மையக்கரு.
சராகர்ஹி சண்டை என்று நினைவுகூரப்படும் இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கேசரி படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 21.50 கோடி வசூலை அடைந்தது. 2019-ம் ஆண்டில் வேறெந்த ஹிந்திப் படமும் இந்த வசூலை அடையவில்லை. இதற்கு முன்பு கல்லிபாய் ரூ. 19.40 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேசரி படம் இந்தியாவில் 3600 திரையரங்குகளிலும் மற்ற நாடுகளில் 600 திரையரங்குகளிலும் என ஒட்டுமொத்தமாக 4200 திரையரங்குகளில் வெளியானது.