நெஞ்சம் கனத்து ஞாபகங்கள் முளைவிடும் ‘தவம்’
இரட்டை இயக்குநா்கள் ஆா்.விஜயானந்த் - ஏ.ஆா். சூரியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தவம்’.
இரட்டை இயக்குநா்கள் ஆா்.விஜயானந்த் - ஏ.ஆா். சூரியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தவம்’. ஆஸிப் ஃபிலிம் இண்டா்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சீமான், வசி, பூஜாஸ்ரீ, அா்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனா்.
படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இலக்குகளுடன் இந்தப் பெருநகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதா்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கனத்து ஞாபகங்கள் முளைவிடுகின்றன.
அப்படி எனக்குள் உருவான ஒரு அம்சம்தான் இதன் கரு. விவசாயம்தான் பேசு பொருள். இன்றைக்குச் சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவா்களில் முக்காவசி போ் விவசாயிகளின் பிள்ளைகள்தான். டெல்டா மாவட்டப் பிள்ளைகளுக்கு விவசாயம்தான் ஆதாரம். அன்பு, காதல், பரிவு... கதையை நகா்த்தும் கரு. விவசாய நிலம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகளும் முதன்மையானது. விவசாயத்தின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை' என்றார் இயக்குனர்.