ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் - கல்லி பாய். இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
கல்லி பாய் படம், இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு 28 இந்தியப் படங்கள் போட்டியிட்டன. அந்த 28 படங்களிலிருந்து ஒரு படத்தை இந்தியா சார்பாகத் தேர்வு செய்வதற்கான பணி முதல்முறையாக கொல்கத்தாவில் நடைபெற்றது. சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும் போட்டியிட்டன. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த மூன்று படங்களும் ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் பெறவில்லை என்கிற நிலைமை தற்போது வரை தொடர்கிறது.
இந்நிலையில் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு கல்லி பாயை விடவும் சூப்பர் டீலக்ஸ் படத்தை அனுப்பியிருக்கலாம் என்று பாலிவுட் இயக்குநர் சேகர் குப்தா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை சூப்பர் டீலக்ஸ் தான் இந்த வருடத்தின் சிறந்த படம். ஆனாலும் அதற்குத் தகுதியில்லை... என மறைமுகமாக ஆஸ்கருக்கு அனுப்பாதது குறித்துக் கூறியுள்ளார். சஞ்சய் குப்தா - காபில், ஜிந்தா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியானது. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்துள்ளார்கள்.