மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்கவில்லை: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு
மத்திய அரசு ஹிந்தி மொழியைத் திணிக்கவில்லை. மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை...
கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டக் குறும்படப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது:
மத்திய அரசு ஹிந்தி மொழியைத் திணிக்கவில்லை. மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இதனை அரசியல் ஆக்குகிறார்கள். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என தவறான பிரசாரம் இங்குப் பரப்பப்பட்டு வருகிறது. பொது மொழி என ஒன்று இருப்பது அவசியம். 90% மக்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரியவில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என உள்ளேன் என்று பேசினார்.
பிறகு செய்தியாளர்களிடம் ஞானவேல் ராஜா பேசியதாவது: ஹிந்தி என்பது இன்னொரு மொழி. ஹிந்தி திணிப்பு அல்ல, ஹிந்தி படிப்பு. பொதுவாக ஒரு மொழி இருப்பது தவறில்லை என்று பேசினார்.