செய்திகள்

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?: விடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த நடிகர் சிவகுமார்!

எழில்

நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன் என்று தன் மீதான சர்ச்சைகளுக்குப் பதில் அளித்துள்ளார் நடிகர் சிவகுமார்

தன் கடவுள் நம்பிக்கை மற்றும் தன்னுடைய குடும்பம் பற்றி சமீபத்தில் உண்டான சர்ச்சைகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவக்குமார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா? சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என சாமி கும்பிடுபவர்கள் பல கோடி பேர் நம் நாட்டில் உள்ளார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். கடவுளுக்கு வடிவம் இல்லை. ஆண், பெண் என்கிற பேதம் இல்லை.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழின் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்வார். பிறகுதான் சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜை அறையில் எல்லாச் சாமி படங்களும் இருக்கின்றன.

‘கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல’என்று சொன்னவர் காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ‘ஹேராம்’என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.

இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். யூ டியூபில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது அடுத்தவரை நேசித்தல், அவர்களைச் சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல். இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான். எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT