முகப்பு
செய்திகள்

"கட்-அவுட்களுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்": சிம்பு மீது புகார் 

எனது கட்-அவுட்களுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்று நடிகர் சிம்பு கூறியதை எதிர்த்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 23 ஜனவரி, 2019 at 10:40 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:27 PM


எனது கட்-அவுட்களுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்று நடிகர் சிம்பு கூறியதை எதிர்த்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சிம்பு அண்மையில் ரசிகர்களுக்கு வெளியிட்ட விடியோவில், " எனது படம் வெளியாகும் நேரத்தில், எனது கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யவேண்டாம். அந்த பணத்தில் அம்மா, அப்பாவுக்கு துணி எடுத்துக்கொடுங்கள்" என்ற வகையில் பேசியிருந்தார். ஆனால், இந்த விடியோ விவகாரம் குறித்தான பேச்சுகள் ஓய்வதற்குள் மேலும் ஒரு விடியோவை வெளியிட்டார். 

அந்த 2-ஆவது விடியோவில், "எனக்கு இருப்பது வெறும் 2 அல்லது 3 ரசிகர்கள் தான் என்று சிலர் கூறுகின்றனர். அதனால், அந்த 2 அல்லது 3 ரசிகர்கள் எனது படம் வெளியாகும்போது எனது கட்-அவுட்களுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்" என்றார். இதனால், நடிகர் சிம்பு உளறிக்கொண்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. 

Advertisement

இந்நிலையில், நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியாகும் பிப்ரவரி 1-ஆம் தேதி பாதுகாப்பு அளிக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

இதுதொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், 

"சிம்புவின் படம் வெளியாகும் நேரத்தில் பால் முகவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல் ஆணையரை வலியுறுத்தியுள்ளோம். சிம்புவின் பேச்சு தனது ரசிகர்களை மற்ற ரசிகர்களுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் உள்ளது. அதனால், சட்ட ஒழுங்கு அடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம். 

பொதுவாகவே திரைப்படம் வெளியாகும் நேரத்தில் ஒரு சில ரசிகர்களால் பால் வாங்க முடியாது என்பதால், பால் திருட்டு நடைபெறும். அதனால், இந்த படம் (வந்தா ராஜாவாத்தான் வருவேன்) வெளியாகும் நேரம் போலீஸார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். 

கடந்த 2015 முதல் நாங்கள் பால் அபிஷேகத்தை எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் சுமார் 25 சதவீத மக்கள் பால் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் நிறைய பால் வீணாக்கப்படுகிறது. இது அறிவார்ந்த செயல் அல்ல. இது நிறுத்தப்படவேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.