முகப்பு
செய்திகள்

ஒரு ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை: செல்வமணி கோரிக்கை

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவும்படி பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On : 8 ஏப்ரல், 2020 at 5:15 PM
பகிர்:

கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி அவதிப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவும்படி பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த செல்வமணி பேசியதாவது:

Advertisement

நம் தமிழக எல்லையில் மருத்துவக் குழுவினர்களும் பரிசோதனை செய்கிறார்கள். வெளி மாநிலத்திலிருந்து வாகனங்களில் வருபவர்களை சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவர் குழு பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கிறது. நான் வேறு மூன்று மாநிலங்களுக்குள் சென்றபோது அதுபோல வசதிகள் இல்லை. நம்மிடம் ஆவணங்களை மட்டும் சரிபார்க்கிறார்கள். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி.

பெப்சி தொழிலாளர்களுக்கு இதுவரை 2 கோடியே 45 லட்சம் நிதியுதவி வந்துள்ளது. 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக வந்துள்ளன.

25,000 பேர் உள்ள எங்கள் அமைப்பில் இதுவரை 16,000 பேருக்குச் சிறிது சிறிதாக உதவியுள்ளோம். தினமும் 100 பேரை வரவைத்து மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்களை வழங்குகிறோம். ஆயிரம் ரூபாய்க்கான ஒரு மூட்டை அரிசியும் (25 கிலோ) அத்தியாவசியமான பொருள்களை வாங்க ரூ. 500-ம் வழங்குகிறோம். இன்னும் 9,000 பேருக்கு உதவி தேவைப்படுகிறது.

25,000 பேருக்கும் இதுபோன்று உதவி செய்யவேண்டும் என்றால் எங்களுக்கு ரூ. 3.75 கோடி தேவைப்படுகிறது. தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை அரிசி வழங்குவது என்பது எங்களுக்குக் குறைவாகத் தெரிந்தது. பார்த்திபன் தான் முதலில் அரிசியாகக் கொடுத்தார். ஆனால், அரிசி மூட்டை வாங்கும்போது தொழிலாளர்கள் நன்றியுடன் கண்ணீர் விட்டார்கள்.

நாங்கள் யாரிடமும் நேரடியாகச் சென்று உதவி கேட்கவில்லை. உதவ வேண்டும் என்கிற மனத்தை எதிர்பார்க்கிறோம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.