ஆகாயத்தில் கோட்டை கட்டியபோது தந்தை வைத்த குட்டு: இயக்குநர் மோகன் ராஜா உருக்கம்
எங்களுடைய படங்களின் மூலம் உங்கள் குடும்பங்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. அதே நேரத்தில்...
ஊரடங்குச் சமயத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் மூலம் ரசிகர்களின் குடும்பங்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது எனக் கூறியுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.
இதுபற்றி ட்விட்டரில் மோகன் ராஜா தெரிவித்ததாவது:
என் மகள் என்னிடம் வந்து, அப்பா... இப்போது கே டிவியில் ஒளிபரப்பாகும் தனி ஒருவனையும் சேர்த்து நீங்கள் இயக்கிய 8 படங்கள் (ஜெயம், எம். குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்) மற்றும் சித்தப்பா நடித்த நிமிர்ந்து நில், பூலோகம், அடங்க மறு, வனமகன், கோமாளி என இந்தப் படங்களை ஊரடங்கு காலத்தில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பிவிட்டார்கள் என்று தான் குறித்து வைத்ததை உற்சாகமாகப் பகிர்ந்தாள்.
ஊரடங்கு என்கிற கடினமான நாள்களில் எங்களுடைய படங்களின் மூலம் உங்கள் குடும்பங்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் சினிமாவில் அளவற்ற ஆசையோடு உலகத்தையே உலுக்கி விட வேண்டும் என்று ஆகாயத்தில் நான் கோட்டை கட்டிய பக்குவமற்ற வயதில், குரு என்கிற அதிகாரத்தோடு என் தந்தை என் தலை மீது குட்டு வைத்து, ரசிகர்கள் தான் நம் கடவுள், அவர்களைத் திருப்தி செய்கிற படங்களை மட்டும் எடு என்கிற மந்திரத்தை தலையில் அன்றே ஏற்றியது நினைவுக்கு வருகிறது.
இந்த நொடியிலும் மாடியில் தன் மகன்கள் எடுத்த படத்தைப் பூரிப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் தந்தைக்கு என்றும் போல் இன்றும் நன்றியுணர்வுடன் நான் என்று கூறியுள்ளார்.