கரோனாவை அலட்சியமாகக் கருத வேண்டாம்: சரத் குமார் வேண்டுகோள்
எந்தவொரு மனிதருக்கும் பிற மனிதருக்குப் பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை...
செய்திகள்கரோனாவை அலட்சியமாகக் கருத வேண்டாம்: சரத் குமார் வேண்டுகோள்
எந்தவொரு மனிதருக்கும் பிற மனிதருக்குப் பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை...
கரோனாவை யாரும் அலட்சியமாகக் கருத வேண்டாம் என குணமடைந்து வீடு திரும்பியுள்ள நடிகர் சரத் குமார் கூறியுள்ளார்.
நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத் குமாருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் தெரிவித்தார் அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா. சரத் குமாருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவா் ஹைதராபாத்தில் இருக்கிறாா். அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிறந்த மருத்துவா்கள் அவருக்கு மிகச் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகின்றனா் என்றார்.
இந்நிலையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள சரத் குமார், ட்விட்டரில் கூறியதாவது:
டிசம்பர் 8 அன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்குப் பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகிறேன்.
உடல்நலம் குணமடைய உதவிய மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயகுமார், ரவிக்கிரண், சந்திரகாந்த், செவிலியர்கள், டயட்டீஷியன், தூய்மைப் பணியாளர்கள், வார்டு செக்யூரிட்டிகள் எல்லாருக்கும் மனபூர்வமாக நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும்தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது.
மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்துதலில் நான் இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள், சமத்துவச் சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன்.
இருப்பினும், கரோனா தொற்று உலகில் பல்வேறு மக்களைத் தற்போதும் பாதித்து வருகிறது. கரோனாவை அலட்சியமாகக் கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.
எந்தவொரு மனிதருக்கும் பிற மனிதருக்குப் பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனத்தில் கொண்டு வெளியில் செல்லும்போது, முகக்கவசம் அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, சுய பாதுகாப்பை உறுதி செய்து நோய்த்தொற்று பரவாமல் தடுத்திடுவோம் என்றார்.