தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பவர் யார் என்கிற கேள்விக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது.
இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். ஜூன் 26 அன்று வெளியாகவுள்ளது.
ஒரு பேட்டியில் இப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறியதாவது:
சசிகலா வேடத்துக்கு பிரியா மணியைத்தான் முதலில் நடிக்கவைப்பதாக இருந்தோம். ஆனால் தேதிகள் பிரச்னை காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை. உடனடியாக எங்களுடைய தேர்வு, பூர்ணா தான். மேக் அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். வேடத்துக்கு அருமையாகப் பொருந்தினார் என்று கூறியுள்ளார்.
இதுதவிர வி.என். ஜானகி வேடத்தில் மதுபாலா நடிக்கவுள்ளார். இதுகுறித்து விஜய் கூறியதாவது: ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் நடிக்கத்தான் மதுபாலாவைத் தேர்வு செய்தோம். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது ஜானகி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது என்று கூறியுள்ளார்.