பின்விளைவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என வெளிப்படையாகப் பேசிய ‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர்!
இதை நான் சொல்லக்கூடாது. ஆனால் பின்விளைவுகளைச் சந்தித்துக்கொள்கிறேன்....
பிரபல திரைப்பட விமரிசகர் பரத்வாஜ் ரங்கன், சமீபத்தில் வெளிவந்த சில்லுக் கருப்பட்டி படத்துக்கு விமரிசனம் எழுதியிருந்தார். அதற்கு வந்த ஒரு எதிர்வினையை ட்விட்டரில் பகிர்ந்தார்.
ரஜினி, விஜய் போன்றோரின் வெற்றிப் படங்களுக்கு மத்தியில் இப்படியொரு படம் வந்திருப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. எனக்குப் படம் பார்க்க ஆசையாக உள்ளது. ஆனால் காது கேளாத வயதானவன் நான். என்னால் திரையரங்குக்குச் செல்ல முடியாது. எனவே இந்தப் படம் அமேஸான் பிரைமில் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது தான் எனக் கூறியிருந்தார்.
ஒரு படம் இணையத்தில் (ஓடிடி) வெளியாகும் வரை காத்திருக்காமல் திரையரங்குக்குச் சென்று பாருங்கள் என எப்போதும் கூறுவேன். ஆனால் சிலருக்கு நிஜமாகவே போக முடியாத நிலை இருக்கும். அவர்களுக்கு ஓடிடி எவ்வளவு உபயோக உள்ளது என்பதற்கு உதாரணம் இது என்று ட்விட்டரில் பதிவு எழுதினார் பரத்வாஜ் ரங்கன்.
Advertisement
இதைப் படித்த சில்லுக் கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம், பரத்வாஜ் ரங்கனுக்குப் பதில் அளித்ததாவது:
கடவுளே, இது மிகவும் உணர்வுபூர்வமாக்குகிறது.
இதை நான் சொல்லக்கூடாது. ஆனால் பின்விளைவுகளைச் சந்தித்துக்கொள்கிறேன். சில்லுக் கருப்பட்டி படம் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸ் வெளியாகும் என அவரிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.