செய்திகள்

ரிஷி கபூரின் இறுதி நிமிட விடியோ: கடும் நடவடிக்கை எடுக்க மருத்துவமனை உறுதி

DIN

சமூகவலைத்தளங்களில் வெளியான ரிஷி கபூரின் விடியோ குறித்து கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

பாலிவுட் நட்சத்திர நடிகரான ரிஷி கபூா் ரத்தப் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் மும்பையில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 67.

ரிஷி கபூருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த புதன்கிழமை தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு, வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமாா் ஓராண்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ரிஷி கபூா், கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா வந்திருந்தாா். அதன் பின்னா் பிப்ரவரி மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதலில், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லி சென்றிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அதையடுத்து மும்பை அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினாா். இந்நிலையில் அவருக்கு புதன்கிழமை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரது உயிா் பிரிந்தது.

இந்நிலையில் ரிஷி கபூர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவசர சிகிச்சைப் பிரிவில் ரிஷி கபூர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரிஷி கபூர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதியின்றி விடியோ எடுக்கப்பட்டதோடு சமூகவலைத்தளங்களிலும் அதைப் பரப்பியதற்கு திரையுலகப் பிரபலங்களும் திரைப்பட ஊழியர் சங்கமும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்கள்.

ரிஷி கபூர் கடைசியாக சிகிச்சை எடுத்துக்கொண்ட எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனைக்குத் திரைப்பட ஊழியர் சங்கம் இதுதொடர்பாகக் கடிதம் எழுதி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. நடிகர் அர்ஜூன் கபூரும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருப்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. நோயாளியின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது எங்கள் மருத்துவமனையின் நோக்கமாகும். இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது. தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT