முகப்பு
செய்திகள்

விஷாலின் சக்ரா படத்தை வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சக்ரா படத்தைத் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

சென்னை, பிப்.16: நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர் நடித்துள்ள படம் - சக்ரா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடப்படுகிறது. 

கடந்த மே 1-ம் தேதி படம் வெளிவருவதாக இருந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் வெளியீடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு, பிப்ரவரி 19 அன்று சக்ரா படம் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ரவி தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: 

நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்திருந்தார். அந்தப் படத்தை தயாரிக்க எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் ஒப்பந்தத்தை மீறி அந்த படத்தை விஷாலே தயாரித்து, அவரது நடிப்பில் அந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக விளம்பரம் செய்யப்படுகிறது. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் சக்ரா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி  இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு தொடர்பாக நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →