பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம்: வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய் சேதுபதி
இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது பட்டாக்கத்தியைக் கொண்டு விஜய் சேதுபதி கேக் வெட்டிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதுபோல கேக் வெட்டியவர்களைக் காவல்துறையினர் இதற்கு முன்பு கைது செய்துள்ளார்கள். இதனால் விஜய் சேதுபதியின் செயலைப் பலரும் கண்டித்தார்கள்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மூன்று நாள்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அதில் பிறந்த நாள் கேக்கினைப் பட்டக்கத்தியால் வெட்டியிருப்பேன். பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தில் கதைப்படி ஒரு பட்டாக்கத்தி முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும். எனவே படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.